×

நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார்!: அழகப்பன் உள்பட 6 பேரையும் கேரளாவில் கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்..!!

திருவனந்தபுரம்: நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகாரில் பதிவான வழக்கில் தேடப்பட்டு வந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ்குமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகை கவுதமி, தனது 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அழகப்பன் என்பவரும் அவரது குடும்பத்தினரும் முறைகேடாக ஏமாற்றி அபகரிப்பு செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். கவுதமி கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அழகப்பன் அபகரித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், அழகப்பன், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவும், காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் மத்திய குற்றப்பிரிவும் என தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே அழகப்பனும், அவரது மனைவியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 3 தனிப்படைகள் அமைத்து சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் தலைமறைவாக இருந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் உள்ளிட்ட 6 பேரை கூண்டோடு பிடித்து போலீஸ் கைது செய்தது.

டிரான்ஸிட் வாரண்ட் பெற்று கேரளாவில் இருந்து 6 பேரையும் சென்னைக்கு அழைத்து வரும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாதத்துக்கும் மேலாக தேடப்பட்டு வந்த 6 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கேரளாவில் கைது செய்திருக்கிறது. காரைக்குடி அருகே கோட்டையூரைச் சேர்ந்த அழகப்பன் உள்ளிட்டோரின் வீடுகளிலும் போலீஸ் ஏற்கனவே சோதனை நடத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.

The post நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார்!: அழகப்பன் உள்பட 6 பேரையும் கேரளாவில் கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Gauthami ,Alagappan ,Kerala ,Thiruvananthapuram ,Nachiammal ,
× RELATED இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்!!